முஷ்ணம், ஏப். 16: முஷ்ணம் அருகே வாலிஸ்பேட்டையில் உள்ள ஏரியில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக பலியாயினர். இச்சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே வாலிஸ்பேட்டையை சேர்ந்த லெனின்-மேகலா தம்பதியரின் ஒரே மகன் கவின் (4), பிரகாசராயர்-ரத்தினமேரி தம்பதியரின் ஒரே மகன் சஞ்சை (8). நேற்று காலை சிறுவர்கள் 2 பேரும் வாலிஸ்பேட்டை கோக்கட்டை ஏரிக்கு வீட்டில் இருந்து சென்றுள்ளனர். சிறுவர்கள் மீண்டும் வீடு திரும்பாததால் அவர்களது பெற்றோர் எங்கு சென்றார்கள் என தேடியுள்ளனர். இந்நிலையில் மாலை 4 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த அற்புதம் என்பவர் கோக்கட்டை ஏரிக்கு சென்ற போது ஏரியில் மிதந்த நிலையில் இருந்த சஞ்சயை பார்த்து மீட்டுள்ளார். இதையடுத்து கவின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியினர் சந்தேகமடைந்து ஏரியில் தேடிய போது கவினும் சடலமாக மீட்கப்பட்டான்.