ஜாலியன் வாலாபாக் நினைவு தின பேரணி

தூத்துக்குடி, ஏப்.16:தூத்துக்குடியில் ஜாலியன் வாலாபாக் நினைவு தின பேரணிநடந்தது. சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேயரால் ஜாலியன் வாலாபாக்கில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தூத்துக்குடியில் தேசிய மாணவர் படை (கடற்படை பிரிவு) சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணி நடந்தது. தூத்துக்குடி ரோச் பூங்கா முன்பிருந்து புறப்பட்ட பேரணிக்கு, தமிழ்நாடு தேசிய மாணவர் படையின் கடற்படை பிரிவு கட்டளை அதிகாரி சுரேஷ் கே.ராமரெட்டி தலைமை வகித்தார். பேரணி புனித லசால் மேல்நிலைப்பள்ளி வழியாக சென்று காமராஜ் கல்லூரியில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற கல்லூரி மாணவ, மாணவிகள் பிளாஸ்டிக் விழிப்புணர்வு, கொரோனா விழிப்புணர்வு மற்றும் ஜாலியன் வாலாபாக் சம்பவம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர். தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பேரணியில், கடற்படை உதவி கட்டளை அதிகாரி நிஷாந்த் சிங், கல்லூரி தேசிய மாணவர் படையின் கடற்படை பிரிவு ஆசிரியர்கள் வடிவேல் முருகன் (காமராஜ் கல்லூரி), நிஷாந்தி (வஉசி கல்லூரி) மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Related Stories: