இன்று அம்பேத்கர் பிறந்த நாள் தமிழக காங். பொருளாளர் ரூபி மனோகரன் வாழ்த்து

நெல்லை, ஏப். 14: அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தவர். ஒடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று சிந்தித்தவர். அதற்கான வழிமுறைகளை சட்ட வடிவில் தந்தவர். இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் அனைத்துத் துறைகளிலும் தலைநிமிர்ந்து நிற்பதற்கு அம்பேத்கர் முழுமுதற் காரணம். இந்திய விடுதலைக்குப் பிறகு நாட்டின் முதல் சட்ட அமைச்சராக பணியாற்றிய பெருமைக்குரியவர் அம்பேத்கர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும், சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கி இருக்கிறார். இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராக இருந்தவர். இந்தியாவின் மிகச் சிறந்த உயரிய விருதான பாரத ரத்னா விருது, அவருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது. இன்று அம்பேத்கரின் பிறந்த நாளில் (ஏப்.14) அவரை போற்றி வணங்குகிறேன். இவ்வாறு ரூபி மனோகரன் கூறியுள்ளார்.

Related Stories: