வலங்கைமான், ஏப்.13: வலங்கைமான் அடுத்த அரவூர் பகுதியில் பழுதடைந்த உள்ள தார் சாலையை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த அரவூர் ஊராட்சி பகுதி அரவத்தூர் கிராமத்திற்கான பிரதான சாலை மாணிக்கமங்கலம் சாலையில் இருந்து பிரிந்து செல்கிறது. சுமார் 600 மீட்டர் தூரம் உள்ள இந்த சாலை சிறிதும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையிலும் கரடுமுரடாக கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்த நிலையில் நீண்ட காலமாக இருந்து வருகிறது. 300க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களை சார்ந்த இப்பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பழுதடைந்த சாலையால் பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர்.