திருப்பூர், ஏப். 10: திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கொரோனா பரவல் தடுக்க தமிழக அரசு அறிவித்த நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட வேண்டும். நோய் பரவலை கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி
இல்லை. மேலும், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் உணவு விடுதிகளுக்கு வருபவர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை ெசய்து அனுமதிக்க வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியும் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறான நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் மீது பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 நபர்களுக்கு மிகாமலும் கலந்து கொள்ள வேண்டும். வழிபாட்டு தலங்களை பொருத்தவரையில் ஏற்கனவே 31.08.2020 அன்று அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். வழிபாட்டுத்தலங்களில் இரவு 8 மணி வரை வழிபாடு செய்ய அனுமதிக்கப்படும். பொது இடங்களில் எச்சில் துப்புபவர் மீதும் சம்பந்தப்பட்ட துறையினரால் உடனடியாக அபராதம் விதிக்கப்படும். தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அருகாமையிலுள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கு சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் உரிய ஏற்பாடு மேற்கொள்ள வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். மேலும், மேற்சொன்ன அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று மேலும் பரவாமல் இருக்க பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.