வாய்க்காலில் மூழ்கி தொழிலாளி பலி

ஈரோடு, ஏப் 9: திருப்பூர் மாவட்டம் ஈட்டிவீராம்பாளையம் தட்டான்குட்டையை சேர்ந்தவர் ரவி (42). தொழிலாளி. இவர் கடந்த 6ம் தேதி ஓட்டுப்போட செல்வதாக அவரது மனைவி கவிதாவிடம் (39) கூறி சென்றார். பின்னர் உறவினர் தர்மராஜ் என்பவருடன் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள கொளப்பலூர் மேட்டுவலவு பகுதியில் ஓடும் கீழ் பவானி வாய்க்காலில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு ரவி சென்றதால் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கினார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தர்மராஜ் மற்றும் அவரது நண்பர்கள் தண்ணீரில் மூழ்கிய ரவியை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் வெள்ளாங்கோவில் கீழ்பவானி வாய்க்காலில் ரவியின் உடல் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த சிறுவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரவியின் மனைவி கவிதா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: