ஊட்டி, ஏப். 8: தர்மபுரி அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட 20வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை முதுமலை வனப்பகுதியில் ரகசியமாக விடுவிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் அருகே உள்ள பதனவாடி காப்புக்காடு பகுதியில் சுமார் 20 வயதுள்ள ஆண் காட்டு யானை கடந்த 2 வாரங்களாக அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் சென்று சேதப்படுத்தி வந்தது. இந்த யானையைக் காட்டுக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த யானையை பிடித்து வேறு வனப்பகுதியில் விட வனத்துறை திட்டமிட்டது. நேற்று தர்மபுரி மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜ்குமார் தலைமையில், வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியினை மேற்கொண்டனர். யானையை அடையாளம் கண்டபின், மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.