சிவகங்கை, ஏப். 3: சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகார் தெரிவிக்கலாம் என கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கை: ஏப்.6 அன்று தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அனைத்து கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், மோட்டார் போகக்குவரத்து நிறுவனங்கள், பீடி- சுருட்டு நிறுவனங்கள், அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் தினக்கூலி, தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்கள், தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வேலையளிப்பவர்கள் வழங்க வேண்டும்.