கடையநல்லூர், ஏப்.3:கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் அய்யாத்துரை பாண்டியன் நேற்று கடையநல்லூர் நகர பகுதிகளில் வீதி வீதியாக சென்று குக்கர் சின்னத்திரைக்கு வாக்கு சேகரித்தார். அவர் சென்ற அனைத்து பகுதிகளிலும் ஏராளமான பெண்கள், குழந்தைகள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அப்பகுதியில் உள்ள பெண்கள் வேட்பாளர் அய்யாத்துரை பாண்டியனுக்கு குளிர்பானங்கள் கொடுத்து மகிழ்ந்தனர். அப்போது அவர் பேசியதாவது, கடையநல்லூர் தொகுதியில் மாணவ மாணவியர் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். தேர்வில் வெற்றி பெற தவறிய ஏழை, எளிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் அமைக்கப்படும். கடையநல்லூரில் குடிநீர் பிரச்னையை தீர்க்க பாடுபடுவேன். தொகுதி மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் பதிவேட்டில் பராமரிக்கப்பட்டு அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தொகுதியில் பொருளாதாரம் கல்வி சுகாதாரம் மேம்படும் வகையில் தொலைநோக்கு திட்டங்கள் தீட்டப்படும்.