விருதுநகர், ஏப்.2: விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர்(தனி), சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இதுவரை விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி, செந்தில்குமார் நாடார் கல்லூரிகளில் நடைபெறுவது வழக்கம். இம்முறை கொரோனா தொற்று பரவல் காரணமாக வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு தொகுதிக்கும் அமைக்கப்படும் 14 டேபிள்களுக்கான இடைவெளியை அதிகரிக்க வேண்டும். இல்லையென்றால் 14 டேபிள்களை 7 ஆக குறைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த தேர்தல்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு வந்த இரு மையங்களில் இடப்பற்றாக்குறை இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். மாவட்டம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, வாக்கு எண்ணிக்கைக்கு பெரிய அளவிலான அறை அமைப்பை உடைய விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லூரியை வாக்கு எண்ணிக்கைக்கு தேர்வு செய்து ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.