ஊட்டி, ஏப்.2: கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரியசோலை மற்றும் விலங்கூர் பகுதிகளில் திமுக வேட்பாளர் காசிலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கூடலூர் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தாயகம் திரும்பிய மக்கள் அதிகம் உள்ளனர். இவர்களிடம் வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, திமுக., வேட்பாளர் காசிலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கூடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரியசோலை, விலங்கூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அவர், ஆதரவாளர்களுடன் சென்று பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவர் பேசியதாவது: கரியசோலை மற்றும் விலங்கூர் பகுதிகளில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை திமுக ஆட்சி அமைந்ததும் நிவர்த்தி செய்யப்படும். சாலை வசதி, குடிநீர் மற்றும் தெரு விளக்கு போன்ற தீர்க்கப்படாத அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும். மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வன விலங்குகள் வராமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.