ஓசூர், ஏப்.2: ஓசூரில் பறக்கும்படையினர் நடத்திய வாகன தணிக்கையில் 347 மதுபாட்டில் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை கட்டுப்படுத்தும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர். மேலும், வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநில எல்லை பகுதியான கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவின்பேரில், டாஸ்மாக் மாவட்ட மேலாளர் புஷ்பலதா மற்றும் தேர்தல் சிறப்பு பறக்கும் படையினர், காவல்துறையினர் ஆகியோர் அடங்கிய குழுவினர், ஓசூர் அருகே தொரப்பள்ளி சாலையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.