ஈரோடு, ஏப். 1: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் 2,741 வாக்குச்சாவடிகளில் மக்கள் தங்களது வாக்குகளை செலுத்த உள்ளனர். இதில், 362 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக மாவட்ட தேர்தல் அதிகாரி மூலம் அறிவிக்கப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 1600 போலீசார், 200 ஊர்காவல் படையினர், 200 முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதுமட்டும் அல்லாமல் 8 கம்பெனிகளை சேர்ந்த துணை ராணுவத்தினரும் 617பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.