நாமக்கல், மார்ச் 20: நாமக்கல்லில் திமுக தலைமையிலான மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் தலைமை வகித்து, வேட்பாளர் ராமலிங்கத்தை அறிமுகம் செய்து வைத்து பேசுகையில், ‘கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ரேஷன் அட்டைக்கு ₹5 ஆயிரம் கொடுக்கும்படி தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக அரசை வலியுறுத்தினார். ஆனால் ₹1,000 மட்டுமே தரப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன், மீதமுள்ள ₹4 ஆயிரம் வழங்கப்படும். திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும். இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்,’ என்றார்.