மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, திமுக கூட்டணியில், மதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மல்லை சத்யாவை ஆதரித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், விவசாயி என்று சொல்லிக்கொள்ள எடப்பாடிக்கு அருகதை கிடையாது என மதிமுக பொது செயலாளர் வைகே கூறினார். மதுராந்தகம் (தனி) தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிடும் மல்லை சத்யாவை ஆதரித்து, கருங்குழி பேரூராட்சி மேலவலம்பேட்டை ஜங்ஷனில், மதிமுக பொது செயலாளர் ைவகோ, வேனில் இருந்தபடியே பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து, மதுராந்தகம் தேரடி தெருவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், வேனில் இருந்தபடியே, அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் மல்லை சத்யாவுக்கு வைகோ ஆதரவு திரட்டிபேசியதாவது.
தமிழக மக்களின் உரிமைகள் எல்லாம் பறிபோய் விட்டது. டெல்லியில் விவசாயிகள் சட்ட மசோதாவுக்கு எதிராக கடந்த 100 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அங்கு போராடி வரும் விவசாயிகளுக்கு மற்ற மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், தமிழக எடப்பாடியின் அரசு விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் உள்ளது. மேலும், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்கிறார். நரேந்திர மோடிக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டார். இந்த நிலையில் எடப்பாடியே நான் ஒரு விவசாயி என்று கூறி வருகிறார். அவர் விவசாயி என்று சொல்வதற்கு அருகதை கிடையாது, தகுதி கிடையாது. இதேபோன்றுதான், நீட் தேர்வு விஷயத்திலும் எடப்பாடியின் செயல்பாடு.
இந்த நீட் தேர்வால் 13 மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்களுடைய இறப்புக்கு எடப்பாடிதான் காரணம் என குற்றம் சாட்டுகிறேன். நீட் தேர்வு விஷயத்தில் நாங்கள் சட்ட திருத்தங்களை இயற்றி கொண்டு வருகிறோம் எனக்கூறி எடப்பாடி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். எடப்பாடி இதுவரை பல்வேறு மோசடிகளை செய்துள்ளார். இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் 22ம் தேதி ஆளுநர் பன்வாரிலால் நேரில் சந்தித்து முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் செய்த பல கோடி ஊழல் குறித்து 97 பக்க ஊழல் புகார்களை கொடுத்துள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று ஸ்டாலின் ஆட்சி அமையும்.இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், எம்பி செல்வம், எம்எல்ஏ புகழேந்தி, மாவட்ட மதிமுக செயலாளர் வளையாபதி, மாவட்ட பொருளாளர் சிவசங்கரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன், மதுராந்தகம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் சத்தியசாய், கருங்குழி பேரூர் செயலாளர் விஜய கணபதி, மதுராந்தகம் நகர செயலாளர் குமார், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஸ்ரீதரன், அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் தம்பு, மதிமுக நகர செயலாளர் ராஜி, அச்சிறுப்பாக்கம் பேரூர் செயலாளர் உசேன், அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட பொருளாளர் கோகுலக்கண்ணன், காங்கிரஸ் நிர்வாகி தமிழ்ச்செல்வன், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எழிலரசன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராமு, ஒன்றிய துணை செயலாளர் பேக்கரி ரமேஷ், ரத்தினவேலு, மதிமுக ஒன்றிய செயலாளர்கள் கோட்டையன், கோபி, இளவரசு, ராஜா, பேரூர் செயலாளர்கள் சரத், முஜிபர் ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.