ஈரோட்டில் இந்திய மருத்துவ சங்கத்தின்(ஐ.எம்.ஏ) தேசிய துணை தலைவர் டாக்டர் சி.என்.ராஜா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய அளவில் பல்வேறு இடங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவுகிறது. தற்போது சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், அரசியல் தலைவர்கள், கூட்டத்தில் பங்கேற்போர், தேர்தல் பணியில் ஈடுபடுவோர் என கூட்டமாக பணியில் ஈடுபடும் சூழல் உள்ளது. அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிய வேண்டும். அதுபோல, தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதால், ஒரு வித பாதுகாப்பு ஏற்படும். தடுப்பூசி போட்டு கொண்டதற்காக, முககவசம் அணிதல், பிற வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டாம் என எண்ண வேண்டாம்.
மகராஷ்டிராவில், 500 மடங்கும், குஜராத், மத்திய பிரதேசத்தில் 200 மடங்குக்கு மேலும் பரவல் உள்ளது. மக்கள் ஒத்துழைக்காவிட்டால், குறிப்பிட்ட பகுதி கட்டுப்பாட்டு பகுதியாகவும், ஒட்டு மொத்த அடைப்பு போன்ற அரசின் கட்டாய நடவடிக்கையை சந்திக்க நேரிடும். இவ்வாறு கூறினார்.