கலசபாக்கம், மார்ச் 17: கலசபாக்கம் அருகே வாலிபர் மர்மமான முறையில் இறந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டதாக கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த மேலாரணி கிராமத்தை சேர்ந்தவர் டிரைவர் பிரகாஷ்(25). கடந்த 13ம் தேதி மாலை வெளியே சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை. நேற்று முன்தினம் மேலாரணி குன்றுமேடு அருகே பிரகாஷ் மர்மமான முறையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. தகவலறிந்த கலசபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, ‘பிரகாஷின் சாவில் சந்தேகம் உள்ளது. அவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளை கைது செய்ய வேண்டும்’ என கூறி, அவரது உறவினர்கள் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை தர மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, டிஐஜி காமினி, எஸ்பி அரவிந்த், போளூர் டிஎஸ்பி அறிவழகன் ஆகியோர், பிரேத பரிசோதனை அறிக்கை வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததன்பேரில் உறவினர்கள் சமரசம் ஆனார்கள். பின்னர், போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.