நெல்லை: முனைவர் பட்டம் பெறும் அனைவருக்கும் ஆளுநர் தனது கையால் பட்டம் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ”இந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய அரசு உத்தரவுப்படி வந்தே மாதரம் முதலில் பாடப்படும்; 2-வதாக தேசிய கீதம்; 3-வதாக மட்டுமே தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்படும்” என்று பல்கலைக் கழக துணை வேந்தர் சந்திரசேகர் அறிவித்தது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவை உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் புறக்கணித்தார்.
விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்படுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் புறக்கணித்தார். இதனிடையே 871 பேரில் 113 பேருக்கு மட்டுமே ஆளுநர் பட்டம் வழங்குவார் என்று அறிவித்த நிலையில் மாணவர்களின் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதுகாப்பு, கடந்த முறை மாணவி ஒருவர் ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்ததையும் கருத்தில் கொண்டு முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அறிவிப்பால் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆளுநரிடம் நேரடியாக பட்டம் பெறுவோம் என்ற நம்பிக்கையில் வந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
முனைவர் பட்டம் பெறும் அனைவருக்கும் ஆளுநர் கையால் பட்டம் வழங்குவதே மரபு. மரபை மாற்றாமல் அனைத்து மாணவர்களுக்கும் ஆளுநர் கையால் பட்டம் வழங்க வலியுறுத்தினர். நெல்லை மனோன்மணியம் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் குளறுபடியால் மாணவர்கள் ஆவேசம் அடைந்தனர். மாணவர்களின் கடும் எதிர்ப்பால் நெல்லை மனோன்மணியம் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து முனைவர் பட்டம் பெறும் அனைவருக்கும் ஆளுநர் தனது கையால் பட்டம் வழங்குவார் என்று ஆளுநர் செயலாளர் சஜன்சிங் சவான் அறிவித்துள்ளார்.
