டெல்லி: பொதுத்தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுத்தல்) திருத்த மசோதா 2026 குறித்து காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். வினாத்தாள் கசிவுக்கான பொறுப்புக்கூறல் உறுதி செய்யப்பட்டு, கல்வி அமைச்சராக இருந்த பிரதான் தார்மீக அடிப்படையில் ராஜினாமா செய்திருப்பதை தாம் வரவேற்பதாக குறிப்பிட்டார். ஆனால் தற்போது கொண்டு வந்துள்ள மசோதா வெறும் தண்டனைக்கான மசோதா மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அது மட்டுமே வினாத்தாள் கசிவைத் தடுத்து விடாது.
வினாத்தாள் தயாரிப்பு மற்றும் தேர்வு நாளன்று வினாத்தாள் விநியோகம் ஆகியவற்றில் கசிவு ஏற்படாதவாறு வலுவான நடைமுறையை உருவாக்க, நந்தன் நிலேகனி தலைமையில் பிரதமர் ஒரு குழுவை அமைத்துள்ளார். ஆனால், 2024-லும் இதேபோன்றதொரு வினாத்தாள் கசிவு சம்பவம் நடந்தது, அப்போது ராதாகிருஷ்ணன் குழு அமைக்கப்பட்டது; அக்குழு தனது அறிக்கையையும் சமர்ப்பித்தது. அந்த அறிக்கை என்ன ஆனது? அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது யாருக்கும் தெரியாது.
எனவே ஒரு குழுவை அமைத்தாலே தீர்வு கிடைத்துவிடும் என்று அர்த்தமல்ல. மருத்துவக் கல்லூரிகள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், ‘நீட்’ தேர்வு அவசியமா என்பதே ஒரு முக்கிய கேள்வியாக உள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சரின் ராஜினாமா என்பது ஒரு பகுதியே; ஆனால் நீண்டகாலமாக நீடிக்கும் ஒட்டுமொத்தப் பிரச்சனைக்கான தீர்வு இதுவல்ல. முதிர்ச்சியும் நாகரிகமும் கொண்ட எந்தவொரு அரசும் தனது சொந்தக் குடிமக்கள் மீது கொடூர நடவடிக்கைகளை மேற்கொள்ளாது என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
