திருப்பூர், ஜூலை 27: திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீன்கள் வாங்க வருவது வழக்கம். இதன் காரணமாக அதிகாலை 2 மணி முதலே பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் நேற்று ஆடிப் பிரதோஷம் என்பதால், மீன் பிரியர்களின் கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டது. பொதுமக்கள் வருகை குறைந்திருந்த போதிலும் தமிழகம் மற்றும் கேரளம் மாநில கடலோரப் பகுதிகளில் இருந்தும்,மேட்டூர் உள்ளிட்ட அணைப் பகுதிகளில் இருந்தும் தென்னம்பாளையம் சந்தைக்கு மீன்கள் வரத்து கடந்த வாரங்களைக் காட்டிலும் கணிசமாக அதிகரித்திருந்தது. வரத்து அதிகரித்து இருந்ததால் கடந்த வாரத்தை காட்டிலும் மீன்கள் விலை சற்று குறைந்திருந்தது.
அதன்படி கடல் மீன்கள் 35 டன் வந்திருந்தது. கடந்த வாரம் ரூ.1,350 வரை விற்பனையான வஞ்சிரம் நேற்று கிலோ ரூ.800 முதல் ரூ.900 வரையிலும், ரூ.600 வரை விற்பனையான பாறை மீன் ரூ.400, சங்கரா ரூ.300-ரூ.350, அயல மற்றும் கிழங்கா கிலோ ரூ.200 முதல் ரூ.230 வரையிலும் விளா மீன் ரூ.400,கணவாய் ரூ.450, இறால் ரூ.450, நண்டு ரூ.300, வாளை மீன் ரூ.300, நெத்திலி ரூ.120, சாலை மீன் ரூ.160, என கிலோவிற்கு 10 முதல் 100 வரை மீன்களுக்கு ஏற்ப விலை குறைந்திருந்தது. டேம் மீன்களைப் பொறுத்தவரை வரத்து 45 டன்களாக இருந்த நிலையில், ரோகு கிலோ ரூ.160, டேம் பாறை ரூ.130, நெய் மீன் ரூ.130, ஜிலேபி ரூ.100 வரை விற்பனையானது.
