ஆத்தூர், ஜூலை 27: கெங்கவல்லியில் வாடகை செலுத்தாததால், குடோனுக்கு உரிமையாளர் பூட்டு போட்டதால், டாஸ்மாக் கடை மூடப்பட்டது. கெங்கவல்லியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடையின் அருகே காலி மதுபாட்டில்களை வாங்கி வைக்கும் குடோனும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இடத்தின் உரிமையாளர் குணசேகரன் என்பவருக்கு, டாஸ்மாக் நிர்வாகம் வாடகை பாக்கி செலுத்தாமல் நீண்ட காலமாக நிலுவை வைத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து, அவர் பலமுறை டாஸ்மாக் ஊழியர்களிடம் கேட்டும், இதுவரை அவர்கள் வாடகை செலுத்தவில்லை. இதுகுறித்து கேட்ட போது உரிமையாளர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டு, குணசேகரன் பூட்டு போட்டு குடோனை மூடி விட்டார்.
இந்நிலையில், டாஸ்மாக் கடையில் காலி பாட்டில் வாங்கி, இருப்பு வைப்பதற்கு போதிய இடம் இல்லாததால் ஊழியர்கள் காலி பாட்டில் வாங்குவதை நிறுத்தி விட்டனர். இதனால் கடைக்கு வரும் குடிமகன்கள் சேல்ஸ்மேனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து, டாஸ்மாக் கடையை நேற்று மதியம் 2 மணியளவில் டாஸ்மாக் ஊழியர்கள் மூடி விட்டு சென்று விட்டனர். இதனால் மது வாங்க வந்த குடிமகன்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இதை சாதகமாக வைத்து கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் சந்து கடையில் மது விற்பனை ஜோராக நடந்தது.
