ஓமலூர், ஜூலை 29: ஓமலூர் அடுத்த திண்டமங்கலம் கிராமத்தில் வரலாற்று சிறப்புமிக்க பனங்காட்டூர் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி நீரை ஆதாரமாக கொண்டு, அப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல், கரும்பு மற்றும் காய்கறி பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். மேலும், இந்த ஏரியால் அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, கிராம மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வெளியூர்களில் இருந்து வரும் மர்ம நபர்கள், பிளாஸ்டிக் கழிவுகள், கட்டிடக் கழிவுகள், தெர்மாகோல் மற்றும் இறைச்சிக் கழிவுகளை குவியல் குவியலாக கொண்டு வந்து, பனங்காட்டூர் ஏரியில் கொட்டி வருகின்றனர். இதனால் ஏரியின் கரைப்பகுதி முழுவதும் கழிவுகள் தேங்கி, ஏரியே குப்பை கூடாரமாக காட்சி அளிக்கிறது.
கழிவுகளாக ஏரி நீர் முழுவதும் மாசடைந்து வருகிறது. நிலத்தடி நீரும் விஷமாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
