டெல்லி: 2026-ஆம் ஆண்டுக்கான உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு வரலாற்றுச் சாதனை படைத்த அனஹத் சிங்-க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனையாகத் திகழும் அனஹத் சிங் குறித்துப் பெருமிதம் கொள்கிறேன். தங்கப் பதக்கம் வென்று, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஸ்குவாஷ் வீராங்கனையாகத் திகழும் அனஹத் சிங் குறித்துப் பெருமிதம் கொள்கிறேன். இந்தச் சாதனை இளைஞர்களிடையே ஸ்குவாஷ் விளையாட்டை மேலும் பிரபலப்படுத்தும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கனடாவின் ஆன்டாரியோ நகரில் உலக ஸ்குவாஷ் ஜூனியர் தனிநபர் சாம்பியன்ஷிப் நடைபெற்றுவந்தது. இதில் இந்தியாவின் 18 வயது இளம் ஸ்குவாஷ் நட்சத்திரமான அனஹத் சிங், சாம்பியன் பட்டம் வென்று வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி போட்டியில், உலகத் தரவரிசையில் 20வது இடத்தில் உள்ள இந்தியாவின் அனஹத் சிங், இறுதி போட்டியில் எகிப்தின் 17 வயதான 2வது ரேங்கில் உள்ள ருக்கையா சேலமை எதிர்கொண்டார். இதில் 3-0 (11-3, 11-7, 11-9) என்ற நேர் செட் கணக்கில் அனஹத் சிங் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வெல்லும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அனஹத் சிங் பெற்றுள்ளார். இதற்கு முன் 2005ல் ஜோஷ்னா சின்னப்பா இறுதிப்போட்டிக்கு முன்னேறியதே இந்தியாவின் சிறந்த சாதனையாக இருந்தது. மேலும் இறுதிப் போட்டியில் ருக்கையா சேலமை வீழ்த்தியதன் மூலம், 2011 முதல் ஜூனியர் பெண்கள் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தங்கள் வசம் வைத்திருந்த எகிப்தின் ஆதிக்கத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
டெல்லியைச் சேர்ந்த அனஹத் சிங், ஏற்கனவே ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்த நிலையில் இந்தியாவின் அடுத்த ஸ்குவாஷ் சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார்.
