நாமகிரிப்பேட்டை, மார்ச் 16: நாமகிரிப்பேட்டை அருகே, அரசு பள்ளி மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் 200 பேருக்கு சுகாதார துறையினர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளியில் உள்ள 15வயது மாணவி, தேவஸ்தானம் புதூர் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இவர் கடந்த 12ம் தேதி நாமகிரிப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது மாணவிக்கு சிகிச்சையுடன், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று பரிசோதனை முடிவில், மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் மாணவியை தேடிச்சென்றனர். அவர் பள்ளியில் இருப்பதாக தகவல் தெரியவந்தது. உடனடியாக பள்ளிக்கு சென்ற சுகாதாரத்துறை அதிகாரிகள், மாணவியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராசிபுரம் அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.