×

சோனம் வாங்சுக்குடன் உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஒன்றிய அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில், கடந்த 18 நாட்களுக்கும் மேலாக உணவு உட்கொள்ளாமல் தனது உடலை வருத்தி, சாவின் விளிம்பில் நின்று அறப்போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார் லடாக் மண்ணின் கல்விப் புரட்சியாளரும், சூழலியல் அறிஞருமான சோனம் வாங்சுக்.

நீட் தேர்வு வினாத்தாள் வெளியீட்டிற்குப் பொறுப்பேற்று ஒன்றிய பாஜ அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும்தான், டெல்லியில் போராடும் இளம்தலைமுறையினரோடு கைகோர்த்து சோனம் வாங்சுக் களம் கண்டுள்ளார்.

அவருடைய வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட ‘3 இடியட்ஸ்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு, கல்வி என்பது மனப்பாடம் செய்வதல்ல, அது சிந்தனையைத் தூண்டுவது, என்று கைதட்டி ரசித்த இந்த நாடு, உண்மை வாழ்க்கையில் அதே சிந்தனைக்காக ஒரு மாமனிதன் சாவின் விளிம்பில் போராடும்போது, தொலைக்காட்சி அலைவரிசைகளை மாற்றிக் கொண்டு வேடிக்கைப் பார்ப்பது பெரும் அவமானம்.

அதே படத்தின் தமிழாக்கத்தில் நடித்து வெற்றிகண்ட முதலமைச்சர் விஜய், பாஜ அரசின் கொடுங்கோன்மைக் குறித்து அமைதி காப்பதும், சோனம் வாங்சுக் குறித்து குரல் எழுப்பாததும் வருத்தமளிக்கிறது. ஒன்றிய அரசு இனியும் காலம் கடத்தாமல், சோனம் வாங்சுக் மற்றும் மாணவர் பிரதிநிதிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Seeman ,Union Government ,Sonam Wangchuk ,Chennai ,Naam Tamilar Party ,Chief Coordinator ,Jantar Mantar ,Delhi ,
× RELATED வேல்ஸ் அறக்கட்டளையின் கணக்குகளை...