ஐந்து மாதங்களாக நீளும் அமெரிக்கா–ஈரான் போர்: கச்சா எண்ணெய் விலை ஏன் எதிர்பார்த்த அளவுக்கு உயரவில்லை?

அமெரிக்கா–ஈரான் போர் ஐந்து மாதங்களாக தொடர்ந்து வரும் நிலையிலும் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் உயராததற்கான காரணங்களை தற்போது பார்க்கலாம்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி இறுதியில் ஈரானுக்கு எதிராக போரைத் தொடங்கியபோது, உலகளவில் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் முக்கியமான ஹோர்முஸ் ஜலசந்தி பாதையில் தடைகள் ஏற்பட்டு, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 150 முதல் 200 டாலர் வரை உயரக்கூடும் என வல்லுநர்கள் கணித்திருந்தனர்.

இருப்பினும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை அதிகபட்சமாக 126 டாலர் வரையே உயர்ந்தது. எண்ணெய் விலை எதிர்பார்த்த அளவை விட கட்டுக்குள் இருந்ததற்கு ஐந்து முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன.

முதலாவதாக, உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான சீனா தனது கச்சா எண்ணெய் இறக்குமதியை கணிசமாகக் குறைத்தது. மின்சார வாகனங்களின் அதிகரித்த பயன்பாடு மற்றும் பெட்ரோகெமிக்கல் துறையின் உற்பத்தி குறைவு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகும்.

இரண்டாவதாக, உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான அமெரிக்கா, ஏப்ரல் மாதத்திற்குள் நாளொன்றுக்கு 13.93 மில்லியன் பேரல்கள் என்ற சாதனை உற்பத்தி அளவை எட்டியது. மேலும், சர்வதேச ஆற்றல் முகமையுடன் இணைந்து தனது உத்திசார் எண்ணெய் இருப்பிலிருந்தும் சந்தைக்கு எண்ணெயை வெளியிட்டது.

மூன்றாவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான தகவல்கள் மற்றும் திடீர் சந்தை மாற்றங்கள் காரணமாக, எண்ணெய் வர்த்தகர்கள் பெரிய அளவிலான ஊக வணிகங்களில் (Speculative Business) ஈடுபடத் தயங்கினர்.

நான்காவதாக, வளைகுடா பிராந்தியத்தின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, ஹோர்முஸ் ஜலசந்திக்கு மாற்றாக செங்கடலில் உள்ள யான்பு துறைமுகம் வழியாக எண்ணெய் ஏற்றுமதியை பெருமளவில் அதிகரித்தது.

ஐந்தாவதாக, தற்போதைய நிலையில் சந்தையில் போதிய அளவு உடனடி கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதால், இந்த மோதல் தீவிரமடைந்த நிலையிலும் கச்சா எண்ணெய் விலையில் உடனடி தாக்கம் ஏற்படவில்லை.

தற்போது மீண்டும் பதற்றம் அதிகரித்து, பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 90 டாலரை தொட்டாலும், அது ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட 150 டாலரை விட மிகவும் குறைவாகவே உள்ளது. இருப்பினும், விநியோக இருப்புகள் படிப்படியாகக் குறைந்து வருவதால், வரும் நாட்களில் எண்ணெய் விலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Related Stories: