200 ஜெலட்டின் குச்சிகள் கடத்திய தர்மபுரி வாலிபர்கள் 2 பேர் கைது: காஞ்சிபுரத்தில் விற்ற ஆசாமிக்கு வலை வந்தவாசியில் போலீசாரிடம் சிக்கியது

வந்தவாசி: வந்தவாசியில் 200 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்த போலீசார், தர்மபுரியை சேர்ந்த 2 வாலிபர்களை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு ஜெலட்டின் விற்ற காஞ்சிபுரம் ஆசாமியை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தெற்கு போலீஸ் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தணிக்கை வேல் நேற்று அம்மா உணவகம் அருகே நின்றிருந்தார். அப்போது மூட்டையுடன் பைக்கில் வந்த வந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் அரசால் தடை செய்யப்பட்ட வெடி மருந்து 25 கிலோ எடை கொண்ட 200 ஜெலட்டின் குச்சிகள் இருந்தது தெரியவந்தது.

இதற்கிடையில் தப்பிஓட முயன்ற இருவரையும் மடக்கி பிடித்து வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து இருவரையும் காவல் நிலையம் அழைத்துச்சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் தர்மபுரி மாவட்டம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(36), அழகேசன்(35) ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவரும் கிணறு தோண்டும் பணிக்காக தோட்டா வைப்பதற்கு ஜெலட்டின் குச்சிகளை காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் இருந்து வாங்கி வந்ததாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ், அழகேசன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அனுமதியின்றி கடத்திய வெடிபொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர். மேலும் ஜெலட்டின் குச்சிகளை விற்ற உத்திரமேரூர் தாலுகா மேலானுர் பகுதியை சேர்ந்த சுரேஷ்பாபு என்பவரை போலீசார் தேடிச்சென்றனர். ஆனால் போலீசார் வருவதை அறிந்து அவர் தலைமறைவானார். தொடர்ந்து அவரை தேடி வருகின்றனர்.

Related Stories: