சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்: அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகி பேச்சால் திடீர் பரபரப்பு

 

சென்னை: சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி விலக வேண்டும் என்று மதுரை மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியதால் நேற்று நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னையில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனை கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சட்டமன்ற மற்றும் மக்களவை, உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்வியை தழுவுவது ஏன் என்பது பற்றி கட்சி நிர்வாகிகளுடன் அவர் விளக்கங்களை கேட்டு அதற்கான காரணத்தை கண்டறியவும் உத்தரவிட்டு வருகிறார். கடந்த சில நாட்களாக எடப்பாடி பழனிசாமி நடத்தும் இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அதிமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் எடப்பாடி பழனிசாமி நேற்று முதல் தொடர்ச்சியாக 5 நாட்கள் மீண்டும் ஆலோசனை மேற்கொள்கிறார். நேற்றைய கூட்டத்தில் மதுரை, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இன்று தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகளுடனும், 22ம் தேதி திருப்பூர், நாமக்கல், வட சென்னை மாவட்ட நிர்வாகிகளுடனும் 23ம் தேதி கோவை, திண்டுக்கல், வட சென்னை மாவட்ட நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் மதுரை பகுதி செயலாளர் கந்தன் பேசும்போது, ‘‘தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பொதுச்செயலாளர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி விலக வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு பதில் அளித்து எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ‘‘நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 47 தொகுதிகளில் அதிமுகவை வெற்றி பெற வைத்துள்ளேன். நான் ஏன் பதவி விலக வேண்டும்?’’ என்று கேள்வி எழுப்பினார். இதனால் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்தவர்கள் பகுதி செயலாளரை சமாதானப்படுத்தியதால் அமைதி திரும்பியது.

Related Stories: