விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி மும்முரம்

 

இடைப்பாடி, ஜூலை 20: இடைப்பாடி அருகே வட்ராம்பாளையம் மோட்டூரில், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்துக்கு விற்பனை செய்வதற்காக இரவு பகலமாக சிலைகள் தயாரிக்கும் பணியில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதுமாக விநாயகர் சதுர்த்தி விழா, வரும் செப்டம்பர் 14ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே அரசிராமணி பேரூராட்சி வட்ராம்பாளையம் மோட்டூர் பகுதியில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை சிற்பக் கலைஞர்கள் இரவும், பகலமாக தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். நீரில் எளிதாக கரையும் வகையிலான சிலைகளை பெண்கள், ஆண்கள் என 100க்கு மேற்பட்டோர், கடந்த 6 மாதமாக தயார் செய்து வருகின்றனர்.

தற்போது இந்த விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாம்பே கணபதி, எலி கணபதி, அம்மையப்ப கணபதி, குடும்ப விநாயகர், சிவன் பார்வதி முருகன் குடும்ப சமேத விநாயகர், பாகுபலி விநாயகர், சூரனை வதம் செய்யும் விநாயகர், மான் விநாயகர், மாடு விநாயகர், கஜ விநாயகர், பாம்பு மேல் அமர்ந்திருக்கும் விநாயகர் என 500க்கும் மேற்பட்ட வடிவங்களில் வித்தியாசமான விநாயகர் சிலைகள் தயாரித்துள்ளனர். மரவள்ளி கிழங்கு மாவினால், அரை அடி முதல் 18 அடி உயரம் வரை கொண்ட சிலைகளை தயாரித்துள்ளனர். இந்த சிலைகளை 100 ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலைக்கு விற்பனை செய்கின்றறனர். வெளிமாநிலம், மாவட்டங்களில் இருந்து ஆடர்கள் வந்துள்ளது.

இதுகுறித்து சிற்பகடல் சின்னசக்தி கூறுகையில், ‘கடந்த 6 மாதமாக இரவு, பகலாக விநாயகர் சிலைகளை தயார் செய்து வருகிறோம். அரசின் விதிமுறைக்கு உட்பட்டு இந்த சிலைகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து சிலைகளை வாங்கிச்செல்வார்கள். இந்தாண்டு ஆர்டர்கள் வந்துள்ளது. நேரடியாக வந்தும் சிலர் சிலைகளை வாங்கி செல்வார்கள். இதனால் சிற்ப கலைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படுகிறது,’ என்றனர்.

 

Related Stories: