ஊட்டி, ஜூலை 18: சுற்றுலா தலங்களுக்கு மினி பஸ்களை இயக்கக்கூடாது என வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநர்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். ஊட்டி ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ஊட்டியில் சுமார் 1800 ஆட்டோக்கள் இயங்கி வருகிறது.
ஊட்டி ஒரு சர்வதேச சுறு்றுலா தலமாக உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆட்டோக்கள், ஜீப், கார், மேக்சிகேப் போன்றவைகள் மூலம் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகின்றனர். இதன் மூலம் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சில தனியார் மினி பஸ் உரிமையாளர்கள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, மத்திய பஸ் நிலையம், ரோஜா பூங்கா, படகு இல்லம், கர்நாடக பூங்கா போன்ற பகுதிகளுக்கு மினி பஸ்கள் இயக்க பெர்மிட் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும். எனவே, இந்த பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, சுற்றுலா தலங்களுக்கு மினி பஸ்கள் இயக்குவதை தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
