சென்னையில் போக்சோ வழக்கில் கைதானவர் தப்பியோட்டம்

சென்னை: சென்னையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ராஜா தப்பியோடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அம்பத்தூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ராஜா கைதானார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் வயிற்று வலி என கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அம்பத்துாரைச் சேர்ந்தவர் ராஜா (வயது 20). இவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில், அம்பத்துார் மகளிர் போலீசாரால், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த மாதம் 15ம் தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

தன் கிட்னியில் கல் இருப்பதால், வயிறு வலிப்பதாக புழல் சிறை போலீசாரிடம், ராஜா நேற்று மதியம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, ராஜா உட்பட இரண்டு விசாரணை கைதிகளை, ஐந்து ஆயுதப்படை காவலர்கள், போலீஸ் வாகனத்தில், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சிகிச்சைக்கு பின், மருத்துவமனையில் உள்ள உணவகத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, காவலர்களின் கவனத்தை திசை திருப்பிய ராஜா, போலீசாரை ஏமாற்றி விட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து ராஜா தப்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மற்ற கைதியை உடனடியாக மூன்று காவலர்கள், புழல் சிறைக்கு அழைத்து சென்றனர். இரண்டு காவலர்கள், மருத்துவமனை முழுவதும் தேடியும் ராஜா கிடைக்கவில்லை. தலைமறைவான ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Related Stories: