ஓசூர் அருகே லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து

ஓசூர்: திண்டிவனத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். காயமடைதோர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓசூர் அருகே சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கிரானைட் லாரி ஒன்று திடீரென சாலையைக் கடக்க முயன்றபோது, ஓசூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து அதன் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணிகள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். லாரி சாலை வளைவில் திரும்பியதே விபத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

விபத்து ஏற்பட்டவுடன், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் சூளகிரி காவல்துறையினரும் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டனர். பின்னர், அவர்கள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

காலை நேரத்தில் இந்த விபத்து நேரிட்டதாலும், விபத்துக்குள்ளான பேருந்தும் லாரியும் தேசிய நெடுஞ்சாலையிலேயே நின்றதாலும், அப்பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்குப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூளகிரி காவல்துறையினர் போக்குவரத்து நெரிசலைச் சீர்செய்ததோடு, விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: