50 ஆண்டுகளுக்கு பிறகு நல்ல காத்தாயி அம்மன் கோயிலுக்கு கொண்டு வரப்பட்ட 5 சாமி சிலைகள்

சீர்காழி, மார்ச் 14: சீர்காழி அருகே மன்னங்கோயில் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு 5 சாமி சிலைகள் கொண்டு வரப்பட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மன்னங்கோயில் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான நல்ல காத்தாயி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்த 9 ஐம்பொன் சிலைகள் மாயமானதால் பக்தர்கள் அதிர்ச்சியில் இருந்தனர். இதையடுத்து கோயில் குலதெய்வ காரர்கள் ஏனங்குடி வீரமணியுடன் சேர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் நல்ல காத்தாயி அம்மன் கோயில் சிலைகள் குறித்து தகவல் உரிமை சட்டத்தின்கீழ் தகவல் கேட்டிருந்தனர்.

அதன் அடிப்படையில் பாதுகாப்பு கருதி நல்ல காத்தாயி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 5 சிலைகளை திருமயிலாடி சுந்தரேஸ்வரர் கோயிலில் வைத்துள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதைதொடர்ந்து 5 சிலைகளை காத்தாயி அம்மன் கோயிலுக்கு எடுத்து வந்து சிறப்பு வழிபாடு நடத்த வேண்டுமென இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் குலதெய்வ காரர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதைதொடர்ந்து கடந்த 10, 11, 12ம் தேதி என 3 நாட்கள் சுப்பிரமணியர், தெய்வானை, வள்ளி, பிடாரி, ஐயனார் ஆகிய 5 சிலைகள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு வழிபாடு செய்ய அனுமதி வழங்கினர். இதையடுத்து 50 ஆண்டுகளுக்கு பிறகு பலத்த பாதுகாப்புடன் நல்ல காத்தாயி அம்மன் கோயிலுக்கு சாமி சிலைகள் கொண்டு வரப்பட்டு 3 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சாமி சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் திருமயிலாடி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

Related Stories: