அவனியாபுரம்: மதுரை அவனியாபுரம் அருகே பெருங்குடி பகுதியில் நேற்று முன்தினம் மாலை ஆயுதங்களுடன் மர்ம கும்பல் நிற்பதாக உளவுத்துறை போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து உளவுத்துறை காவலர் ராஜா சம்பவ இடத்திற்கு சென்றார். அங்கு பெருங்குடி பயணியர் விடுதி அருகே சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே காட்டாமங்கலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
மேலும் அவர்களிடம் காவலர் ராஜா விசாரித்துக் கொண்டிருந்தபோதே, ஆத்திரத்தில் 3 பேரும் கற்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் ராஜாவை கொடூரமாக தாக்கினர். அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் சத்தம் போடவே அங்கிருந்து 3 பேரும் தப்பியோடிவிட்டனர். தகவலறிந்து வந்த பெருங்குடி போலீசார், காவலர் ராஜாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தலையில் பலத்த காயமடைந்த காவலருக்கு 16 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பெருங்குடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
