அரூர் அருகே சாராயம் காய்ச்சியவர் கைது

அரூர் : தர்மபுரி மாவட்டம், அரூர் அருகே பையர்நாய்க்கன்பட்டி கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் எஸ்ஐ புஷ்பராஜன், காவலர்கள் ரகுபதி உள்ளிட்டோர் அப்பகுதியில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பையர்நாய்க்கன்பட்டியை சேர்ந்த அர்ஜுனன்(65) என்பவர், தனது விவசாய நிலத்தில் உள்ள வாழை மரங்களுக்கு இடையே 2 பிளாஸ்டிக் பேரல்களில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டு பதப்படுத்தி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரல்களிலும் இருந்த 70 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர்.

மேலும் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்பட்ட வெல்லம், கடுக்காய், விளாம்பழ பட்டை, அலுமினிய பாத்திரங்கள் மற்றும் 100 மில்லி சாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அர்ஜுனன் மீது வழக்குபதிவு செய்த மதுவிலக்கு போலீசார், அவரை கைது செய்து அரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: