ஊட்டி, மார்ச் 11: மைனலை மட்டம் முதல் கிட்டட்டி வரை பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு பாலகொலா கவுன்சிலர் கடிதம் அனுப்பியுள்ளார். பாலகொலா ஊராட்சி தேனாடு கவுன்சிலர் ராஜேஷ்வரி மாநில தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஊட்டி அருகேயுள்ள மைனலை மட்டம், கிட்டட்டி மட்டம், தேனாடு, மைனலை ஆகிய கிராமங்கள் பாலகொலா ஊராட்சிக்குட்பட்டது. இந்த கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக ஊட்டி - மஞ்சூர் சாலை சந்திப்பில் இருந்து கிட்டட்டி கிராமம் வரை சுமார் 3 கி.மீ. தூரம் உள்ளது. இச்சாலை கடந்த பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனை சீரமைக்கக்கோரி கடந்த பல ஆண்டுகளாக கிராம மக்கள் வலியுறுத்தி வந்ததன் பேரில், இக்கிராமத்திற்கு செல்லும் சாலையை சீரமைக்க பாலகொலா ஊராட்சியில் நிதி ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னரே நிதி ஒதுக்கப்பட்டு, பணி ஆணையும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.