சஹல்: ஜெர்மனியில் ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. ஆண்களுக்கான 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் போட்டி நடந்தன. இதன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் 16 வயது வீரர் பிரிதம் கேந்த்ரே, பியுஷ் சர்மா பங்கேற்றனர். சமீபத்தில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய பிரிதமிற்கு, இது 2வது சர்வதேச தொடர் ஆகும்.தகுதிச்சுற்றில் இந்தியாவின் பியுஷ் சர்மா (629.0 புள்ளி), பிரிதம் (628.2) 3, 5வது இடம் பெற்று, பைனலுக்குள் நுழைந்தனர்.
இதில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி பிரிதம், மொத்தம் 251.3 புள்ளியுடன் முதலிடம் பெற்று, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். ரஷ்யாவின் டிமோபெய் (250.9), நார்வேயின் ஆஸ்ட்லி (228.4) அடுத்த இரு இடம் பெற்றனர். பியுஷ் சர்மா (207.4) 4வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
பெண்கள் அணிகளுக்கான 25 மீ., பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அஞ்சலி, பரிஷா, நிதிலா இடம்பெற்ற அணி 1713 புள்ளிகள் எடுத்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. இந்தியா இதுவரை 5 தங்கம், 1 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கம் பெற்று, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
