மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார், நேற்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:
தவெக அரசுக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி, முன்னேற்றம், சட்டம் ஒழுங்கு, போதை பொருள் நடமாட்டம், தொடர் மின்வெட்டு, டெல்டா குறுவை சாகுபடியினால் ஏற்பட்டிருக்கிற வறட்சி, பயிர்க்கடன் தள்ளுபடி, தேர்தல் வாக்குறுதி, தொலைநோக்கு திட்டம் குறித்தெல்லாம் கவலையில்லை. அரசியல் ஆதரவற்றவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க ஆள் பிடிக்கிற வேலையை அட்டகாசமாக செய்து நமது விஜய் தம்பியின் தவெக அரசு அதிரடி காட்டி வருகிறது. ஆனால், வாசல் தேடி வருகின்ற அரசியல் ஆதரவற்றோர்களுக்கு, மானமுள்ள, மரியாதையுள்ள வரவேற்பு மட்டும் யாரும் எதிர்பார்க்கக் கூடாது.
இன்றைக்கு நீங்கள் சட்டசபையிலே இருக்கிற மவுன விரதமும், டெல்லியில் போய் நீங்கள் காட்டுகிற மவுன விரதமும், மக்கள் பிரச்னைகளுக்கு நீங்கள் காட்டுகிற தொடர் மவுன விரதமும், சட்டசபையிலே எழுப்புகிற கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் காட்டுகிற மவுனமும், மொத்தத்திலே நடப்பது தவெக அரசா, மவுன அரசா என்பதுதான் தமிழ்நாட்டு மக்களுடைய கேள்வி. தவெக அரசின் மவுன புரட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி எப்போது வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு பேசியுள்ளார்.
