அந்தியூர்,மார்ச்9: ஈரோடு மாவட்டத்தில் நேற்று மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.4.80 லட்சம் சிக்கியது. அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் கவுந்தப்பாடி ரோட்டில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மெய்யப்பன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் என்.கே.கே பெரியசாமி தோட்டத்துக்கு அருகில் வந்த ஒரு பைக்கை சோதனையிடுகையில் அதில் ரூ.1.50 லட்சம் இருப்பது தெரிய வந்தது. விசாரணையில் உரிய ஆவணமின்றி பணத்தை வெள்ளி திருப்பூரைச் சேர்ந்த அசோகன்(33) என்பவர் கவுந்தப்பாடியில் இருந்து ஆப்பக்கூடல் நோக்கி எடுத்து வந்தது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் பவானி வட்டாட்ச்சியர் முத்துகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். மொடக்குறிச்சி: ஈரோடு - கரூர் செல்லும் சாலையில் பஞ்சலிங்கபுரத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மூர்த்தி மற்றும் சுதாகர், எஸ்.ஐ., உமாபதி ஆகியோர் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஈரோட்டிலிருந்து காரில் வந்த ஈரோடு கல்யாணசுந்தரம் வீதியைச் சேர்ந்த பரத் (28) என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி காரில் வைத்திருந்த ரூ.80 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் மொடக்குறிச்சி தாசில்தார் சரவணமூர்த்தியிடம் பணத்தை ஒப்படைத்தனர்.