புதுடெல்லி: சமீபத்தில் மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் கலப்படம் செய்யப்பட்ட இருமல் மருந்துகளால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இருமல் மருந்துகளின் தரம் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு மத்தியில் ஒன்றிய சுகாதார அமைச்சகம் சில விதிகளை மாற்றி உள்ளது.
இது தொடர்பாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘மருந்துகள் விதிகள் 1945ன் அட்டவணை கே, குறிப்பிட்ட வகை மருந்துகளுக்கு மருந்துகள் மற்றும் அழகுசாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் அதன் கீழ் உள்ள விதிகளில் சில அம்சங்களில் இருந்து விலக்கு அளிக்கிறது. இதன்படி, அட்டவணை கே-ன் 13வது பதிவு, 1000க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட கிராமங்களில் சில சில்லறை விற்பனை உரிம விதிமுறைகளை பின்பற்றாமலேயே இருமல் மருந்துகளை விற்பனை செய்ய அனுமதிக்கிறது. தற்போது அதில் சிரப் என்ற வார்த்தை நீக்கப்பட்டதன் மூலம் இனி இருமல் மருந்துகளுக்கு இந்த விலக்கு கிடையாது. இதன் விளைவாக, சிறிய கிராமங்களில் இருமல் மருந்துகளை இனி இருமல் மருந்துகளை உரிமம் பெற்ற மருந்ததகங்கள் மூலம் மட்டுமே விற்கப்பட வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் குக்கிராமங்கள் உள்ளிட்ட நாடு முழுவதும் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இருமல் மருந்துகள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
