இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த தடை: பிரதமர் ஸ்டார்மர் அறிவிப்பு

லண்டன்: 16வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடக செயலிகளை பயன்படுத்துவது தடை செய்யப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து பிரதமர் ஸ்டார்மர் ஆற்றிய உரையில், ‘‘இன்று நமது நாட்டுக்கு ஒரு முக்கியமான தருணம். இது நம் குழந்தைகளுக்கும் நமது எதிர்காலத்துக்கும் ஒரு பெரிய முன்னெடுப்பு மற்றும் உண்மையான மாற்றமாகும். ஏனெனில் 16வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சமூக ஊடகங்களுக்கான அணுகலை அரசு தடை செய்யும் என்று அறிவிக்கிறேன். இதை நான் ஏதோ சாதாரணமாகவோ அல்லது லேசான மனநிலையிலோ செய்யவில்லை. அதே சமயம் இளைஞர்களுக்கு சமூக ஊடகங்களால் எந்த பயனும் இல்லை என்பது போலவும் இதற்கு எந்த சவாலும் இல்லை என்பது போலவும் இதனை நான் சித்தரிக்க விரும்பவில்லை. அது தவறான வாதம். ஆனால் அரசின் செயல்பாடுகள் என்பது எப்போதும் சரியான தேர்வுகளை மேற்கொள்வதைப் பொறுத்தது.

அந்த வகையில் முழுமையான தடை என்பதே சரியான தேர்வு என்பது எனக்கு தெளிவாக தெரிகிறது. டிக்டாக், ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம்,யூடியூப் போன்ற சமூக ஊடக செயலிகளின் தீய விளைவுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் நடத்தப்பட்ட நீண்ட ஆலோசனைகளுக்கு பின்னரே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது” என்றார். வாட்ஸ்ஆப் போன்ற செய்திப் பரிமாற்ற செயலிகள் இந்த தடையில் சேர்க்கப்படாது என தெரிகிறது.

Related Stories: