பெங்களூரு: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு போன்ற இந்திய கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனே பதவி விலக வலியுறுத்தி, பெங்களூருவில் நேற்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் பிரமாண்டமான போராட்டம் நடந்தது. பெங்களூரு பிரீடம் பார்க் பகுதியில் நடந்த இந்த அமைதிவழி போராட்டத்தில் நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ்ராஜ் நேரில் கலந்துகொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.
கடந்த 6ம் தேதி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லி ஜந்தன் மந்தர் பகுதியில், அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே சார்பில் அமைதிவழி போராட்டம் நடந்தது. அதை தொடர்ந்து நாடு முழுவதும் இந்த போராட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் நேற்று பெங்களூருவில் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், மாணவர்கள் அனைவரும், கல்வி சீர்திருத்தத்துக்கான தங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் விதமாக, கைகளில் இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் தேசியக்கொடி ஏந்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை லக்னோ, அமிர்தசரஸ், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களிலும் இந்த போராட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர். இன்று ஜெய்ப்பூரில் நடக்கும் போராட்டத்தில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் பங்கேற்கிறார்.
