திருவனந்தபுரம்: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் 3 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்றது மன்னிக்க முடியாத குற்றம் என்றும், அவர்கள் கேரள மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கேரள முதல்வர் வி.டி. சதீசன் கூறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கேரள மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மோகன் குன்னும்மல், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் மாவூத், மலையாள பல்கலைக்கழக துணைவேந்தர் (பொறுப்பு) பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்து கொண்டதற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்து கேரள முதல்வர் வி.டி. சதீசன் தன்னுடைய முகநூலில் கூறியிருப்பது: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பங்கேற்ற நிகழ்ச்சியில் 3 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கலந்துகொண்டது மன்னிக்க முடியாத குற்றமாகும். இந்த செயலுக்கு கேரள மக்களிடம் துணைவேந்தர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். மதவாதத்திற்கு யார் ஆதரவளித்தாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்வாறு அவர் தன்னுடைய முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
