பத்திரிகையாளர்களை சந்திப்பது எப்படி? முதல்வருக்கு பயிற்சி தரலாமே? நிருபர் கேள்வி; அமைச்சர் அதிர்ச்சி

மதுரை: மதுரை காந்தி மியூசியம் புனரமைப்பு பணிகளை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் ராஜ்மோகன் நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கல்வித்துறையில் முறைப்படி டிஆர்பி மூலம் காலி பணியிடங்கள் வேகமாக நிரப்பப்படும். கல்விக்கூடங்களில் மதம் சார்ந்த அடையாளம் கூடாது என்பது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. ஒரு சில இடங்களில் சாதிய மோதலை வெளியில் இருந்து தூண்டி விடுகிறார்கள். அதனை அனுமதிக்க கூடாது. ஏற்கனவே என்ன நடைமுறை இருந்ததோ அது தொடரும். நானே விபூதி, குங்குமம் வைத்துத் தான் பள்ளிக்கு சென்றேன். அதில் எந்த பிரச்னையும் இல்லை. அரசு பள்ளிகளில் சேர்க்கை விகிதம் தனியார் பள்ளிக்கு நிகராக உள்ளது. அதனை இன்னும் அதிகப்படுத்தவுள்ளோம். இவ்வாறு தெரிவித்தார்.

பின்னர் நிருபர்கள் அமைச்சர் ராஜ்மோகனிடம், ‘‘முதல்வர் விஜய் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லையே? நீங்கள் எங்களை எப்படி சந்திக்கிறீர்கள்? அதேபோல் சந்தித்திட முதல்வருக்கு நீங்களெல்லாம் பயிற்சி தரலாமே?’’ என கேட்டனர். இதனால் பதறிப் போன அமைச்சர் ‘‘இப்படிலாம் சொல்லக்கூடாது. மாண்புமிகு முதல்வர் அவர். அவருக்கு பயிற்சி கொடுங்கள் என சொல்லவே கூடாது. எதிர்மறை எண்ணத்துடன் அணுகவேண்டாம்’’ என்றார்.

Related Stories: