சென்னை: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மீனவர் இயக்கத்தின் தலைவர் நேற்று திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயம்-கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக மீனவர் இயக்கத்தின் தலைவர் அந்தோணி மைக்கேல் சாரத், தனது தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் தனது இயக்கத்தை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், திமுக செய்தி தொடர்புக்குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், எம்பி கான்ஸ்டைன் ரவீந்திரன், முன்னாள் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து திமுக தலைமை கழகம் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:
விளக்கின் மினுக்களுக்கு விட்டில் பூச்சிகள்தான் செல்லும்; இருளகற்றும் விடியலின் ஒளி சூரியனிடம்தான் உண்டு. தமிழ்நாட்டின் அரணாக – தமிழர்களின் வளர்ச்சிக்குத் தூணாக விளங்குவது என்றைக்கும் விளங்குவது திமுக தான் என ஏராளமானோர் நம்பிக்கையுடன் இணைந்து வருகின்றனர். தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக மீனவர் இயக்கத்தின் தலைவர் அந்தோணி மைக்கேல் சாரத், தனது தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து தனது இயக்கத்தைக் கழகத்துடன் இணைத்துக்கொண்டார். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
