கரூரில் 41 பேர் பலி வழக்கு: சிபிஐ மீண்டும் விசாரணை

 

கரூர்: கரூரில் விஜய் கூட்டத்தில் 41 பேர் பலியான வழக்கில் இன்று மீண்டும் சிபிஐ விசாரணையை துவக்கி உள்ளது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தவுடன் விஜய் கரூரில் தங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறாமல், இரவோடு இரவாக சென்னை சென்று விட்டார். மேலும், ஒரு மாதம் கழித்தே பாதிக்கப்பட்டவர்களை சென்னை பனையூருக்கு அழைத்து ஆறுதல் கூறினார்.

நேரில் சென்று ஆறுதல் சொல்லாமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னைக்கு அழைத்து ஆறுதல் கூறியது பல தரப்பினருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், சம்பவத்திற்கு பிறகு அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமறைவாகி விட்டனர். இந்நிலையில் இந்த வழக்கை ஆரம்பத்தில் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரித்தது. அதேபோல் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ கைக்கு வழக்கு மாறியது.

கடந்த அக்டோபரில் சிபிஐ விசாரணையை துவக்கியது. கரூரில் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்ட சிபிஐ அதிகாரிகள் உள்ளூர் மக்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், வியாபாரிகள் ஆகியோரை கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பயணியர் மாளிகைக்கு அழைத்து விசாரணை நடத்தினர். மேலும் தற்போது அமைச்சர்களாக உள்ள ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் மற்றும் கரூர் மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மற்றும் கலெக்டர், எஸ்பி ஆகியோரையும் அழைத்து விசாரித்தனர்.

மேலும் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தற்போதைய முதல்வரும், தவெக தலைவருமான விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி விஜய், கடந்த ஜனவரி 15, 18, 19ம் தேதிகளில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் நடந்த சம்பவம் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதேபோல் கடந்த மார்ச் 17ம் தேதி முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜியையும் டெல்லிக்கு அழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.

மார்ச் மாதம் முதல் சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக யாரிடமும் விசாரணை நடத்தவில்லை. இந்நிலையில் இன்று காலை டிஎஸ்பி பிரவீன்குமார் தலைமையில் 10 அதிகாரிகள் கரூர் சுற்றுலா மாளிகைக்கு வந்து மீண்டும் விசாரணையை துவக்கி உள்ளனர். வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சையது அலாவுதீன், டவுன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சிபிஐ முன் ஆஜராகினர். அவர்களிடம் சிபிஐ விசாரரணை நடத்தி வருகிறது. டெல்லியில் முதல்வர் விஜய் இருக்கும் நிலையில் கரூரில் 41 பலி வழக்கு விசாரணையை சிபிஐ துவக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: