சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து, அவர் ஏற்கனவே வகித்து வந்த தனது மாநிலங்களவை எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இந்த காலியிடத்துக்கான இடைத்தேர்தல் வருகிற 18ம் தேதி நடக்கிறது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், நேற்று (9ம் தேதி) காலை 11 மணிக்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் மாநிலங்களவை தேர்தல் நடத்தும் அதிகாரி தேன்மொழி ஆகியோர் முன்னிலையில் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது.
அப்போது காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி மனு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவருக்கு காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் முன்மொழிந்து இருந்தனர். சுயேச்சைகள் 12 பேருக்கு ஒரு எம்எல்ஏ கூட முன்மொழியாததால், அவர்களது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வாகிறார்.
