அதிராம்பட்டினம், மார்ச் 6: அதிராம்பட்டினம் பகுதியில் கழுதை பால் விற்பனை படுஜோராக நடக்கிறது. 50 மில்லி ரூ.350க்கு வழங்கப்படுகிறது. அதிராம்பட்டினம் பகுதிகளில் கழுதை பால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. இந்த பகுதியில் சில நாட்களாக பெரம்பலூர் மாவட்டம் தொழுதூர் பகுதியை சேர்ந்தவர்கள் கழுதைகளுடன் வந்து முகாமிட்டுள்ளனர். இவர்களிடம் ஆண், பெண், பெரிய கழுதைகள் முதல் சிறிய கழுதைகள் வரை உள்ளன. இவர்கள் அதிராம்பட்டினத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கழுதை பால் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். கழுதை பாலின் (50 மில்லி) விலை ரூ.350, மற்றும் ஒரு பாலடை ரூ.50, என விற்கின்றனர். இந்த கழுதை பாலை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். கழுதை பால் அருந்தினால் இருமல், இளைப்பு, ஆஸ்துமா, சிரங்கு, புண், மஞ்சள் காமாலை, சிறு குழந்தைகள் கல், மண் சாப்பிடுவதால் ஏற்படும் உபாதைகள், வெள்ளை, வெட்டை, சோர்வு, சோகை உள்ளிட்ட நோய்கள் குணமாகும் என்று தெரிவிக்கின்றனர். மேலும் பிறந்து 3 நாளான குழந்தைகள் முதல் 86 வயது முதியவர் வரை கழுதை பால் சாப்பிடலாம் என்கின்றனர்.