பாரீஸ்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி போட்டியில் 8ம் ரேங்க்கில் உள்ள ரஷ்யாவின் 19 வயதான மிரா ஆண்ட்ரீவா, 6-3, 6-2 என்ற செட் கணக்கில், 113வது ரேங்கில் உள்ள 24 வயதான போலந்தின் மாஜா சவாலின்ஸ்காவை வீழ்த்தி பட்டம் வென்றார். ஆண்ட்ரீவாவுக்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். மேலும் மரியா ஷரபோவாவுக்கு (2014) பின்னர் பிரெஞ்ச் ஓபனில் பட்டம் வென்ற ரஷ்ய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார். அவருக்கு கோப்பையுடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகள் மற்றும் 31 கோடி ரூபாய் பரிசு கிடைத்தது. மாஜா சவாலின்ஸ்கா ரூ.15.41 கோடி பெற்றார்.
வெற்றிக்கு பின் மிரா ஆண்ட்ரீவா அளித்த பேட்டி: “நான் மிக மிகச் சிறு வயதிலிருந்தே பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரை தொலைக்காட்சியில் பார்த்து வருகிறேன். இந்தத் தொடரை வெல்வது எனது மிகப்பெரிய கனவுகளில் ஒன்றாகும், மேலும் நான் இப்போது இந்தக் கோப்பையைக் கையில் வைத்திருக்கிறேன் என்பதை என்னால் உண்மையாகவே நம்ப முடியவில்லை’’ என்றார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் அர்ஜென்டினாவின் ஹொராசியோ செபல்லோஸ், ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ் ஜோடி 7(7)-6(4), 6-4 என்ற செட் கணக்கில் இத்தாலியின் சிமோன் பொலெல்லி, ஆண்ட்ரியா வவஸ்ஸோரி ஜோடியை வீழ்த்தி பட்டம் வென்றது.
ஆடவர் ஒற்றையர் பைனலில்ஸ்வெரேவ்-கோபோலி மோதல்;
ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் பைனலில் 3ம் ரேங்க் வீரரான ஜெர்மனியின் 29 வயதான அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 14வது ரேங்கில் உள்ள இத்தாலியின் 24வயது பிளவியா கோபோலி மோதுகின்றனர். இருவரும் இதற்கு முன் 4 முறை மோதி உள்ளனர். இதில் 3ல் ஸ்வெரேவ், 1ல் கோபோலி வென்றுள்ளனர்.
