புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சீனிவாசன் என்பவர் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்,‘‘தமிழ்நாட்டில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், எஸ். ஜெயக்குமார், பி. சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்களது உறுப்பினர் பதவியை திடீரென ராஜினாமா செய்து விட்டு தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்து விட்டனர். இது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகும்.
குறிப்பாக இந்த விவகாரத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி மிகப்பெரிய குதிரை நேரத்தில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினர்களை தன் வசப்படுத்தி உள்ளது. எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 32-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில், மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய தேர்தல் ஆணையம், சிபிஐ, தமிழக அரசு மற்றும் தமிழக சட்டமன்ற சபாநாயகர் ஆகியோர் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என்.புஸ்ஸி ஆனந்த் மற்றும் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், எஸ். ஜெயக்குமார், பி. சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோரும் மனுவில் எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவே இவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
புஸ்ஸி ஆனந்த் மற்றும் நான்கு முன்னாள் எம்.எல்.ஏக்கள் மீது சிபிஐ உடனடியாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். தேர்தல் முடிந்த பிறகு, எவ்வித நியாயமான காரணமும் இல்லாமல் தங்களின் பதவியை ராஜினாமா செய்யும் அல்லது சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்படும் வேட்பாளர்கள், மீண்டும் குதிரை பேரத்தில் ஈடுபடுவதைத் தடுக்க உச்ச நீதிமன்றம் தனது சிறப்புப் அதிகாரமான பிரிவு 142-ஐ பயன்படுத்தி கடுமையான புதிய விதிகளை உருவாக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் இது தொடர்பான புதிய விதிகளை உருவாக்கும் வரை, குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் நான்கு பேரும் சுயேச்சையாகவோ அல்லது எந்தவொரு அரசியல் கட்சியின் ஆதரவாகவும் இடைத்தேர்தல்களில் போட்டியிடக் கூடாது. அதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். குறிப்பாக இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த மனுவானது உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை கூறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
